Header
dravidar - periyar - home dravidar - periyar - articles dravidar - periyar - media dravidar - periyar - photo gallery   dravidar - periyar - links dravidar - periyar - contactus
dravidar - periyar - tamilnadu
dravidar - periyar - news dravidar - periyar - pdk dravidar - periyar - periyar mulakkam dravidar - periyar - marriage without caste dravidar - periyar - ebooks dravidar - periyar - audiovideo
 
leftside
 
 


கட்டுரைகள்

தமிழ்த் தேசியம் தலித்துகளுக்கு எந்தவகையான விளைவை ஏற்படுத்தலாம் எனக் கருதுகிறீர்கள்?

- வழக்கறிஞர் ரஜனி

தென் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும்,மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் மாநில அமைப்பாளரும், தலித் தோழமை மையத்தின் இயக்குநராகவும், சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் மீதான வன்முறைகள், ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் சட்டதளங்களிலும் சமூகத்திலும் பணியாற்றி வருகிறார் வழக்கறிஞர் ரஜனி.

« தலித்துகளின் பிரச்சினைகளை தலித்துகளால் தான் பேசமுடியும் என்ற கருத்தை ஏற்கிறீர்களா?

அது சாதி ஒழிப்பு, தீண்டாமை, ஒழிப்பு போராட்டத்தின் நடவடிக்கைகளை பின்னெடுத்துச் சொல்லும் குறுங்குழுவாதம்

« தலித்திய அமைப்புகளில் உங்கள் ஈடுபாடு எந்தளவில் உள்ளது?

1990களிலிருந்து தலித் அமைப்புகளில் பங்கேற்று வருகிறேன். சிறப்பாக தலித் பெண்களுக்குரிய சிறப்புப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு தலித்  பெண்களை அமைப்பாக்கி, அரசியல்படுத்தி வருகிறோம். பல்வேறு பிரச்சினைகளை, குறிப்பாக தென் மாவட்டங்களில் நடந்த தொடர் கலவரங்களில் தலித் பெண்களின் மீதான வன்முறையை பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டதற்காக மேலவளவு தலித்துக்கள் படுகொலை, கீரிப்பட்டி பாப்பாட்டி தேர்தலை நடத்தக்கோரி பல்வேறு போராட்டங்கள் பொது நலவழக்குகள் அரசு தலித் மாணவர்களுக்கு கொடுத்த கல்வி உதவித் தொகையை நிறுத்தியதை எதிர்த்து வழக்கு. குறிப்பாக தலித் பெண்கள் கையால் மலம் அள்ளுவதை எதிர்த்து கூட்டு போராட்டம், இது போன்ற எல்லாப் பிரச்சினைகளிலும் ஈடுபாடு காட்டியுள்ளோம் தலையீடும் செய்துள்ளோம்.

« பெண்ணியம், பெண்மொழி உருவாக்கம் பற்றிப் பேசுகின்ற இந்த நேரத்தில் பெண் தனது உடலுறுப்பு பற்றிய சொற்பிரயோகங்களை பிரயோகிப்பதை அல்லது உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்துவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?

காலங்காலமாக ஒரு பெண் படுக்க கூப்பிட்டால் இசைந்து போகும் ஆணின் பாலியல் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காகவே படைக்கப்பட்ட 'செக்ஸ்பொம்மை'. பாலியல் தேர்வுகள் இருக்க அனுமதிக்கப் பட்டதில்லை திருமணத்திலும் சரி மற்ற ஆண்,பெண் உறவு,பிற உறவு நிலைகளிலும் சரி பெண்ணின் பாலியல் விருப்பங்களை  பெண்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். அதை வெளிப்படுத்தும் சுதந்திரமும் வேண்டும். எனவே பெண்கள் தனது உடலுறுப்பு தொடர்பான சொற்களை பிரயோகிப்பது இதில் ஒரு பகுதி. நடிகை குஷ்பு இந்தியா டுடே சர்வேயில் கூறிய கருத்துகளுக்காக அவர் தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என்ற கலாச்சாரக் காவலர்களின் நிலைப்பாடு தமிழ்கலாச்சாரம் உச்சகட்ட வன்முறை என்பதன் உதாரணம். பெண்கள் பாலியல் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டாலே செருப்பு, துடைப்பக்கட்டையுடன் விரட்டும் 'தமிழ்க்கலாச்சாரக்' கும்பலுக்கு பாலியல் சுதந்திரம், சமத்துவத்திற்கு தமிழ்ப்பெண்கள், தலித் பெண்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.

« சாதி படிநிலைகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்திய சமூகங்களில் நீங்கள் தலித்துகளாக உள்ளடக்குவது எவர்களை?

தலித் என்பது மகராஷ்டிய மொழியை சேர்ந்த
ஒரு வார்த்தை. உடைக்கப்பட்டது, நொறுக்கப்பட்டது (Broken) எனபது அதன் பொருள் டாக்டர் அம்பேத்கார் பயன்படுத்திய வார்த்தை அது. வெளிப்படையாகவோ, பூடகமாகவோ தீண்டாமை என்கிற சமூக இழிவைத்தாங்கி அடிப்படை உரிமைகள், சிவில் உரிமைகள் மறுக்கப்படும் எல்லா சமூகங்களுக்கும்  பொருந்தும் வகையில் ஷெட்யூல்டு வகுப்பினர் என்று தமிழக அரசும் இந்திய அரசும் 30 சமூகங்களை வகையறை செய்துள்ளனர். டாக்டர் அம்பேத்கார் இதைப் பரந்துபட்டு பயன்படுத்தினார்.

« தலித் மக்களின் எழுச்சியை எந்தக் காலகட்டத்துடன் நீங்கள் இணைத்துப் பார்க்கிறீர்கள்?

1990 களில் டாக்டர் அம்பேத்கார் நூற்றாண்டினையொட்டி தலித் எழுச்சி "அத்துமீறுவோம், அடங்கமறுப்போம், அடித்தால் திருப்பியடி" என்ற கோசங்களை முன்வைத்து இந்துத்துவ சாதீய, தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து எழுந்தது.

« சாதியத்தில் உடைவை ஏற்படுத்தும் செயல்முறைகளாக நீங்கள் எவற்றை முன்மொழிகிறீர்கள்? இவற்றில் உங்களது பங்களிப்பு எந்தளவில் உள்ளது.?

தலித் மக்களை அரசியல் படுத்தி அமைப்பாக்குவது முதல் கட்டம். தலித் மக்கள் அரசியலில் பங்கெடுப்பது அடுத்தகட்டம் ஆனால் இதில் தலித் தலைவர்கள் பல்வேறு சமரசங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் இது தலித் மக்களின் எழுச்சிக்கு எந்தவகையில் பயன்படும் என்பது கேள்விக்குரியதாக உள்ளது. சாதி உடைப்பினை கலாச்சாரரீதியாக எதிர்கொள்வது மற்றொரு பரிமாணம். அதில் கலப்புத் திருமணம் முக்கிய பங்கு வகிக்கிறது. டாக்டர் அம்பேத்கார் சாதி தொடர்ந்து நிலைநிறுத்தப்படுவது சொந்த சாதிக்குள்ளான திருமணங்களாலேயே என்று கூறியுள்ளார். பெரியார் கலப்புத் திருமணத்தை தனது சுயமரியாதை இயக்கத்தின் ஒரு முக்கிய நிகழ்ச்சிகளாகவே வைத்திருந்தார். சாதி உடைப்பினை சட்டரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பல்வேறு தீண்டாமைக் கொடுமைகள் வன்முறைகளை எதிர்த்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தல், சிவில் மனித உரிமைகோரி பொதுநல வழக்குகுள் தொடுத்தல் போன்றவையும் சாதி ஒழிப்பு தீண்டாமை எதிர்ப்புணர்வு தளங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.

« தமிழ்ப் பண்பாடு அல்லது தமிழ்க்கலாச்சாரம் என்ற பொத்தாம் பொதவான வரையறுப்பு மீதான உங்கள் தலித்தியப் பார்வை என்ன?

தமிழ்ப்பண்பாடும தமிழக் கலாச்சாரமும் ஒற்றைத் தன்மையுடையவை இன்று வரை சாதியடிப்படையில் சமூகத்தைப் பிரித்து நிலை நிறுத்தியிருக்கும் இந்துக் கலாச்சாரம் தான் தமிழ்க்கலாச்சாரம். பெண்களின் சமூகப்பங்கெடுப்பை மறுத்து வீடு என்று குறுகிய வெளிக்குள் வேலைப் பிரிவினையின் அடிப்படையில் பெரும்பான்மையான பெண்களை நிறுத்தி வைத்துள்ள கலாச்சாரம் இன்றுவரை 'தமிழர்கள்' என்பவர்கள் சாதி இந்துக்களாகவும் தலித்துக்கள் ,பெண்கள் ஒடுக்குதலுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்கின்றார்கள். எனவே தலித்தியப் பார்வையின் படி 'தமிழ்ப்பண்பாடு', 'கலாச்சாரம்' என்பது தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினரின் இருப்பை அங்கீகாரம் செய்து சமவாய்ப்பு, சமபங்கெடுப்பை உத்திரவாதம் செய்யும் பன்முகக் கலாச்சாரமாக இருக்கவேண்டும்.

« பெரியார் தலித்துகளுக்கான போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றொரு விமர்சனம் வைக்கப்படுகிறதே அது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்??

சில தனிப்பட்ட நகர்களுக்கிடையில் உள்ள பிரச்சினைகளில்
ஒரு சிலரைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் பெரியார் கூறியவற்றை அங்கொன்றும் இங்கொன்றுமாக கஷ்டப்பட்டு பிய்த்துப் பிடுங்கி அவரை தலித் விரோதி என சித்தரிக்கின்றனர். இது சாதி ஒழிப்பு, தீண்டாமை, எதிர்ப்பு போராட்டத்திற்கு இவர்கள் செய்யும் துரோகம். ஏனென்றால் இந்துவத்துவ பார்ப்பனீய சக்திகளுடன் எந்த வித சமரசமும் மேற்கொள்ளாமல் சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பினை முன்னெடுத்தவர் தந்தை பெரியார்.

« தலித் பெண்ணியத்தை கறுப்புப் பெண்ணியத்தின் அருகில் வைத்துப் பார்க்க முடியுமா?

தலித் பெண்ணியத்திற்கும கறுப்பு பெண்ணியத்திற்கும் ஏராளமான
ஒற்றுமைகள் உள்ளன. சாதியக் கொடுமைகள், இனவெறிக் கொடுமைகளை எதிர்ப்பது முதல் ஒற்றுமை. ஆணாதிக்க பங்களிப்பில் கூட ஒரு தலித் ஆண், கறுப்பின ஆண்களின் பங்கு உயர் சாதி ஆண் பங்களிப்பை விட நெகிழ்வுத் தன்மை உடையதாகவே உள்ளது.

« தலித் ஆணின் மீதான ஒடுக்கு முறையைவிட தலித் பெண்ணின் மீதான ஒடுக்குமுறை இரட்டிப்புத்தன்மை கொண்டது என்று கொள்வதில் தவறு உண்டா?

தலித் பெண்களின் மீதான ஒடுக்குமுறை இரட்டிப்புத் தன்மை மட்டுமல்ல பலமடங்குகளைக் கொண்டது. சாதீய வன்முறையும் அதன் வெளிப்பாடான தலித் பெண்களின் மீதான பாலியல் வன்முறையும் மிகக் கொடுமையானது. இத்துடன் தலித்துகள் மீதான அரசு வன்முறையில் அதிகம் பாதிக்கப்படுவது தலித் பெண்களே. இன்றுவரை தலித் பெண்களே கையால் மலம் அள்ளுகிறார்கள். இத்துடன் ஆணாதிக்க சமூகத்தில் இயல்பாகவே திணிக்கப்படும் வன்முறைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

« தமிழ்த் தேசியம் என்பது தலித்துகளுக்கு எந்தவகையான விளைவை ஏற்படுத்தலாம் எனக் கருதுகிறீர்கள்?

உயர்சாதித் தமிழன், தாழ்ந்த சாதி தமிழனை ஒடுக்கும் ஒரு தமிழ்த் தேசியம் தலித் மக்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கு, கிறிஸ்துவ, இஸ்லாமியர் போன்ற  சிறுபான்மையினருக்கும் எதிரானதாகவே இருக்க முடியும். சமீபத்தில்  தமிழ் இயக்குநர் தங்கர்பச்சான் விவாதத்தில் நடிகை குஷ்பு தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் மீது 23 நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதிலிருந்தே தமிழ்த் தேசியம் எவ்வளவு வன்முறை சார்ந்தது என்பது தெரியும்.

« தலித் இலக்கியம் வளர்ச்சி கண்டு வந்து கொண்டிருப்பதாக கருதுகிறீர்களா? தலித் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கதான படைப்புகளாக உங்களது கவனத்துள் ஈர்க்கப்பட்டவைகள் எவை என்று சொல்ல முடியுமா?

தலித் இலக்கியம் நிச்சயமாக வளர்ந்து சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது. சிவகாமி, பாமா, சுகிர்தாரணி, ராஜ்கௌதமன், அழகியபெரியவன் போன்றோரின் படைப்புக்கள் குறிப்பிடத்தக்கது.

 

 
rightside

 

Footer - dravidar - periyar -
  Top    
 
Copyright 2007. Dravidar   Site maintenance by SIT