தலைமை நிலையம்:
1, காமராசர் சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004
தொலைபேசி: 044- 42702230
|
பெரியார் திராவிடர் கழகத்தின்
பிரகடனம்
ஆகஸ்ட் 11 2001 அன்று நடைபெற்ற
பெரியார்திராவிடர் கழகத் தொடக்கவிழா மாநாட்டின் காலை நிகழ்வின் இறுதியில்
கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தந்தை
பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பிரகடனம் ஒன்றை வெளியிட்டார். அதன்
விபரம்:
இன்று தமிழ்நாட்டில் நிலவும் சமுதாயச்
சிக்கல்களுக்குச் சரியான தீர்வானதும், கடந்த காலங்களில் புறக்கணித்
தவர்களாலும், விமர்சித்தவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதும், எதிரிகள்
எந்த முகமூடியோடு வந்தாலும் துல்லியமாக இனங்கண்டு துணிச்சலோடு அவர்களைச்
சந்திக்கவல்லதும் ஆன பெரியாரியலை மக்களிடையே கொண்டு செல்வதும் அதன்வழியே
புதிய சமுதாயத்தைப் படைப்பதும் ஒவ்வொரு பெரியார் தொண்டனுக்கும் முன்னுள்ள
சமுதாயக் கடமையாகும்.
பெரியார் வாழ்ந்த காலத்தைவிட, சாதிச்
சழக்குகளும் - இந்துத்துவ பேராபத்தும் எப்போதுமில்லாத அளவு வளர்ந்து
நிற்கும் சூழலில், பெரியார் இயக்கத்தைத் தடம் புரளாமலும், வீரியத்தோடும்
கொண்டு செலுத்தவேண்டியது அவசியமாகிறது. மாறிவரும் காலச்சூழ்நிலைக்கு ஏற்ப
பார்ப்பன ஆதிக்கமும் வடிவம் மாறி வருகிறது. முற்போக்கு முகமூடி தரித்து
பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் முயற்சிகள் நடந்து
கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் பெரியாரியம் தன்னைத் தகவமைத்து எதிரிகளை
எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டதும்,
அவராலேயே பொரு ளாதார வளத்துடனும் கட்டமைப்பு வசதிகளுடனும்
விட்டுச்செல்லப்பட்டதுமான திராவிடர் கழகம் சமுதாயப் புரட்சியைச் சரியான
திசையில் முன்னெடுத்துச் செல்லாமலும் - பெரியார் கொள்கைகளை நீர்த்துப்
போகச்செய்தும் பல்வேறு தருணங்களில் பெரியார் தத்துவங்களுக்கு முரணான நிலையை
எடுத்ததோடு மட்டுமல்லாமல் சமுதாயப் பணிகளை முற்றுமுழுதாகப் புறக்கணித்து
விட்டு, அதீத அரசியலில் அமிழ்ந்து போய் விட்டது.
ஆகையால், பெரியாரியலில் உண்மையான
பற்றுதலும் - அதை நிறைவேற்றித் தீரவேண்டும் என்ற உந்துதலும், அதற்கென இழப்
புகளையும் சந்தித்துக் களப்பணியாற்றும் துடிப்பும் கொண்ட பெரியாரின்
தொண்டர்கள் ஒன்று திரண்டு செயலாற்றவேண்டும் என்ற வரலாற்றுக் கட்டாயம்தான்
இப்போது உருவாகி இருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று,
இனஉணர்வுச் சிந்த னையோடு – பெரியார் காலத்தில் அளித்ததைப் போன்று ஆதரவைக்
கேட்டு நிற்கிறது எங்கள் கழகம்.
ஒடுக்கப்பட்ட மக்களே!
மனிதஉரிமை ஆர்வலர்களே!
சம உரிமைச் சிந்தனையாளர்களே!
கொள்கை உறுதி ஒன்றை மட்டுமே தன் சொத்தாகக்
கொண்டு களம் இறங்கி இருக்கிற இந்த எளிய
தொண்டர்களின் இயக்கத்துக்கு
தோள்கொடுங்கள். துணை நில்லுங்கள்! இணைந்து நிற்போம்! பெரியார் பணி
முடிப்போம்!
பெரியார் திராவிடர் கழகத்தின்
உறுதிமொழி
ஆகஸ்ட் 11 2001 அன்று நடைபெற்ற
தந்தை பெரியார் திராவிடர் கழகத் தொடக்கவிழா மாநாட்டின் காலை நிகழ்வின்
இறுதியில் கழகப்பொதுச்செயலாளர் தோழர்
விடுதலை இராசேந்திரன் அவர்கள் தந்தை பெரியார் திராவிடர்
கழகத்தின் உறுதிமொழியை வாசித்தார். அரங்கிலிருந்த அனைவரும் எழுந்துநின்று
உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
உறுதிமொழி:
பெரியாரியலை இலட்சியமாக
ஏற்றுக்கொண்டுள்ள நான், அதை சமுதாயத்தில் பிரச்சாரம் செய்வதோடு நின்று
விடாமல், எனது சொந்த வாழ்க்கையிலும் பின்பற்றுவேன் என்று உறுதி ஏற்கிறேன்.
தீண்டாமை, சாதீய
உணர்வுகளிலிருந்து முழுமையாக விடுவித்துக்கொண்டு சாதி, மத மறுப்பாளனாக
வாழ்ந்து காட்டுவேன் என்றும், எனது குடும்பத்தில் சாதிமறுப்புத்
திருமணங்களையே நடத்த முழுமையாக முயற்சிப்பேன் என்றும்,
தாழ்த்தப்பட்ட மக்களின்
விடுதலையிலும், பெண்களுக்குச் சமஉரிமை வழங்குவதிலும் சொல்லொன்று
செயலொன்றாக இல்லாமல் உண்மையாக நடந்துகொள்வேன் என்றும், உதட்டளவில் சாதி
எதிர்ப்புப் பேசிக்கொண்டு உள்ளத்தில் சாதியவாதியாக இருக்கும் எவரும்
பெரியாரியலுக்கு எதிரானவர்கள் என்றே கருதி வெறுப்பேன் என்றும் உறுதி
ஏற்கிறேன்.
ஒழியட்டும் சாதி அமைப்பு!
மடியட்டும் பெண்ணடிமை! வெல்லட்டும் பெரியாரியப் பண்பாட்டுப் புரட்சி!
|