1. திராவிட தேசியம் எப்போதும் பேசப்பட்டதில்லை.
அதாவது திராவிட மரபினம் ஒரே நாடாக அமைய வேண்டுமென யாரும்
பேசியதில்லை.
2. 1938-ல் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தை வைத்து
பெரியாரின் அரசியல், சமுதாயப் பணிகளில் ஒத்துழைத்து வந்த
பிறமொழியாளர்களையும், நட்பு சக்திகளாக்கிக் கொள்ள 1938-ல்
‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று முழக்கத்தை மாற்றினார்.
ஆனாலும் தான் சொல்லும் திராவிட நாடு சென்னை மாகாணம்தான் என்று
தெளிவுபடக் கூறியே வந்துள்ளார். தன்கட்சி மாநாட்டுத்
தீர்மானத்திலும் அதையேபதிவு செய்துள்ளார்.
3. 1995-இல் ஆந்திராவும், 1956ல் பிற மொழிவழி
மாநிலங்களும் பிரிந்த பின்னால்-பார்ப்பன, வடவர் எதிர்ப்பு
கொஞ்சமும் இல்லாத கன்னட, தெலுங்கு, மலையாள நாடுகள் பிரிந்ததற்கு
மகிழ்ச்சி தெரிவித்துத் தன் முழக்கத்தை மீண்டும் ‘தமிழ்நாடு
தமிழருக்கே’ என்று புதுப்பித்து கொண்டார்.
4. தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளப் பகுதிகளை
இணைத்துத் ‘தட்சிண பிரதேசம்’ என்ற ஒன்றை உருவாக்க, நேரு காலத்தில்
ஒரு யோசனை முன் வைக்கப்பட்டது. ‘இரத்தக் களரி ஏற்படும்’ என்று
பெரியார் தெரிவித்த ஆவேச எதிர்ப்பினால்தான் அத்திட்டம்
கைவிடப்பட்டது. திராவிட தேசியம் என்ற விருப்பம் இருந்திருந்தால்
பெரியாரும், அண்ணாவும் இதை வரவேற்கவல்லவா செய்திருப்பார்கள்?
5. அண்ணா போன்றவர்கள் பேசிய திராவிட நாடு
கோரிக்கையை ‘பிற 14 நாடுகளுக்கு அடிமையாக இருக்கிற நம்மை, மற்ற 3
நாடுகளுக்கு அடிமையாக்கும் ஏற்பாடு’ என்றும், தமிழ்நாடு விடுதலை
அடைவதைத் தடுக்கும் முயற்சி என்றும் பெரியார் விமர்சித்தார்.
6. அண்ணா கூட பிரிந்து செல்லும் உரிமையோடு
கூடிய நான்கு நாடுகளின் ஒன்றியமாகத்தான் திராவிட நாட்டைப் பற்றிப்
பேசினார். அது இன்றைய தமிழ் தேசியர்கள் பேசும் ‘தன்னுரிமை’யின்
மறுவடிவம்தானே!
7. பிறகு திராவிட நாடு என்ற கொள்கைகையே அண்ணா
1962-இல் கைவிட்டுவிட்டார்.
8. 1962லிருந்து தி.மு.கவும் திராவிட நாடு
பேசவில்லை இவர்கள் சொல்வதைப் போல் திராவிட தேசியத்தைப்
பேசியவர்கள் யார்? தமிழ்த் தேசியம் அமைப்போரின் கையைப் பிடித்து
தடுத்தவர்கள் யார்?
9. அதாவது கடந்த 40 ஆண்டுகளாக யாரும்
பேச்சுக்காக கூட திராவிட தேசியம் பேசவில்லை.
10. ஈ.வெ.கி. சம்பத் அவர்கள் கண்ட தமிழ்த்
தேசியக் கட்சி, தமிழ்த் தேசியம் பேசியது. அது ‘இல்லாத இந்தி
தேசியம்’ பேசுகிற காங்கிரசில் இணைந்த போது இப்போது ‘மாயையான
திராவிட தேசியம்’ என பேசுகிற - மரபினம், தேசிய இனம் பற்றி
அறிவியல் பூர்வமான உண்மையை உணர்ந்த அய்யா நெடுமாறன் போன்றவர்கள்
சம்பத்துடன் சென்றனர். அது தமிழ்த் தேசியத்துக்கு இழைக்கப்பட்ட
துரோமில்லையா?
11. நெடுமாறன் காங்கிரசில் இருந்து வெளியேறிய
காலம் வரை இந்திய தேசியம் பேசியதும், அவசர நிலை காலத்தில்
தி.மு.க.வை பிரிவினை சக்திகள் என குற்றஞ்சாட்டி நடவடிக்கை
மேற்கொண்டபோது அதற்குத் துணை நின்றதும், காங்கிரசில் சம்பத்
அவர்கள் இணைவதைக் கண்டித்து சம்பத்திடமிருந்து விலகிப்போன ஆசான்,
கோவை செழியன் போன்றோரைப் போல சம்பத்தின் தவறான (இந்திய தேசிய)
வழிகட்டுதலை புறந்தள்ளாமல் இருந்ததும் நெடுமாறன் அய்யா அவர்கள்
தமிழ்த் தேசியத்துக்கு இழைத்த துரோகமல்லவா?
12. இல்லாத இந்திய தேசியமும், உருவாக முடியாத
திராவிட தேசியமும் இன்றைக்கு நாம் அடைந்திருக்கிற இழிநிலைக்குக்
காரணம் என்கிறது ‘தென்செய்தி ஏட்டின் அறிக்கை, சரி. தமிழ்த்
தேசியம் மலர்ந்தால் உடனே எல்லா சிக்கல்களும் தீர்ந்துவிடுமா?
ஆப்கன் தேசியம் மலந்து, தலிபான ஆட்சிபோல பிற்போக்காக அது
அமைந்தால் என்னாவது?
13. தமிழ்த் தேசியத்தை இவ்ளவு உரத்து
பேசுகிறவர்கள் இதுவரை அந்த இலட்சியத்தை முன்னெடுக்க எடுத்த கள
நடவடிக்கைகள் என்னென்ன?
14. காவிரி நீர் பிரச்சினை, முல்லை பெரியார்
பிரச்சினை, நெய்வேலி நிலக்கரி, நரிமணம் பெட்ரோலுக்கு ராயல்டி
போன்ற கோரிக்கைகளை, இவர்கள் குறைகூறும் திராவிட கட்சிகளும் தானே
பேசின. ‘வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு’, ‘வஞ்சிக்கப்படும் விவசாயம்’,
போன்ற நூல்களை வெளியிட்டும், ‘வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு’ என்ற
திட்டத்தோடு பத்து நாட்கள் தமிழ்நட்டின் பல பகுதிகளில்
ஊர்திப்பயணம் மேற்கொண்டும் திராவிடர் கழகம் கூட கருத்துப் பரப்பல்
செய்ததே!
15. சமுதாயத்தில் சாதி உணர்வுகள் தலைதூக்கி
தமிழ்த் தேசிய உணர்வைச் சிதைத்தன என்கிறது ஒரு தென்செய்தி
அறிக்கை. சாதி உணர்வை அழிக்க தமிழ்த் தேசியர்கள் இதுவரை செய்தது
என்ன? வருங்கால செயல்திட்டம் தான் என்ன? |